தீபாவளி பண்டிகைக்கு உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை - உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை


தீபாவளி பண்டிகைக்கு உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை - உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2020 5:52 AM GMT (Updated: 9 Nov 2020 5:52 AM GMT)

தீபாவளி பண்டிகைக்குஉரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம்,

நாகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வரலட்சுமி தலைமை தாங்கினார். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் மகாதேவன், பேக்கிரி சங்க மாநில துணை தலைவர் குப்புசாமி, ஓட்டல் மற்றும் இனிப்பு கடை சங்கம் மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வரலட்சுமி பேசியபோது கூறியதாவது:-

பண்டிகை காலங்களில் பலகாரங்கள் மற்றும் கேக் உள்ளிட்ட உணவு பொருட்களை அதிக அளவில் வாங்குவார்கள். உணவு பொருட்கள் தயாரிப்பில் கலப்படம் இருக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கலர் பொடிகளை பயன்படுத்த கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுபொருட்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

பண்டிகை காலத்தில் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் கண்டிப்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே பொருட்களை பொதுமக்கள் வாங்க வேண்டும். உணவு பாதுகாப்புதுறையின் உரிமம் பெறாமல் உணவு பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் பேக்கிரி கடை உரிமையாளர்கள், இனிப்பு, கார உணவுப் பொருள்களை தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story