தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 11 Nov 2020 12:09 AM GMT (Updated: 11 Nov 2020 12:09 AM GMT)

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவருமான என்.சின்னத்துரை, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

மாவட்ட முன்னாள் செயலாளர் ஆறுமுகநயினார், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வீரவாள் பரிசாக வழங்கினர்.

தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையம் அருகே செண்டை மேளம் முழங்க, பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வரவேற்பு அளித்தனர். முதல்- அமைச்சரை வரவேற்று சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. ஆங்காங்கே வரவேற்பு பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

கலந்து கொண்டவர்கள்

வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், இணை செயலாளர் செரினா சி.த.பாக்கியராஜ், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் ஜவகர், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரவீந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லட்சுமண பெருமாள், வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகேசன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காமாட்சி என்ற காந்தி, ஒன்றிய கவுன்சிலர் அழகிரி என்ற கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story