ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பம் வினியோகம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பம் வினியோகம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Nov 2020 10:00 PM GMT (Updated: 11 Nov 2020 2:03 AM GMT)

புதுக்கோட்டையில் ஊர்க்காவல்படையில் சேர விண்ணப்பம் வினியோகத்தை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் வினியோகம் நேற்று தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விண்ணப்பபடிவத்தை ஒருவருக்கு வழங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். அப்போது வட்டார தளபதி மணியழகன் உள்பட போலீசார் உடன் இருந்தனர்.

விண்ணப்பபடிவங்கள் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முதல் நாளில் விண்ணப்பபடிவங்களை வாங்க இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் வந்திருந்தனர். அவர்களை ஆயுதப்படை மைதானத்தில் நிற்க வைத்து விண்ணப்பபடிவங்களை வழங்கினர். மேலும் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்வது தொடர்பாகவும் ஊர்க்காவல் படை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

விண்ணப்பபடிவங்கள் வருகிற 13-ந் தேதி விரை வினியோகிக்கப்பட உள்ளது. மேலும் அதற்குள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் வருகிற 18-ந் தேதி ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஊர்க்காவல்படை அலுவலகத்திற்கு வர வேணடும். 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சியற்றவர்கள், வயது வரம்பு 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். உடற்தகுதிகள் -காவல்துறையைப் போன்றதாகும்.

எவ்வித குற்றவழக்குகளிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ள பணிகளுக்கு இடையூறின்றி செயல்படலாம். இப்பணிக்குமாத ஊதியம் எதுவும் இல்லை. பணிநாட்களுக்கு உரியபடித்தொகை மட்டும் பெற்றுத்தரப்படும். அரசுதுறையில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஊர்க்காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் ஊர்க்காவல்படையில் தற்போது 265 பேர் உள்ளனர். புதிதாக 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Next Story