கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பொறியியல் பட்டதாரி- சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பொறியியல் பட்டதாரி- சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Nov 2020 10:15 PM GMT (Updated: 12 Nov 2020 2:08 AM GMT)

கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பொறியியல் பட்டதாரி-சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்,

கரூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 29). பொறியியல் பட்டதாரி. இவர் வான்மதி (24) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் கிருஷ்ணகுமாருக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரின் தாய் நிர்மலா உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருஷ்ணகுமார் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாயனூர் அங்குநகர் பகுதியை சேர்ந்தவர் வைரன். இவருடைய மனைவி நதியா இவர்களுக்கு பிரீத்தி (14) என்ற மகளும், சுசீந்திரன் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்த சுசீந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு நகரிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருவதை ஒட்டி, ஆன்லைன் வகுப்பு பாடம் கவனிப்பதில் பிரீத்திக்கும்-சுசீந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுசீந்திரன் கோபித்துக்கொண்டு உறவினர் வீடான சென்னைக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் சென்னை சென்ற சுசீந்திரன் தனது சகோதரி பிரீத்தி மற்றும் தாயாருடன் செல்போனில் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரீத்தி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story