பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் தோல்வியை கிண்டல் செய்த அம்ருதா பட்னாவிஸ், நீலம் கோரே பதிலடி


பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் தோல்வியை கிண்டல் செய்த அம்ருதா பட்னாவிஸ், நீலம் கோரே பதிலடி
x
தினத்தந்தி 13 Nov 2020 7:11 PM GMT (Updated: 13 Nov 2020 7:11 PM GMT)

பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனாவின் தோல்வியை விமர்சித்த தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிசுக்கு, நீலம் கோரே பதிலடி கொடுத்துள்ளார்.

மும்பை, 

பீகாரில் நடந்துமுடிந்த தேர்தலில் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றது.

அதே சமயம் இந்த தேர்தலில் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர்கள் பலர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் சிவசேனா கட்சியை “சாவ் சேனா” என கூறி கேலி செய்தார்.

‘சாவ்’ என்றால் மராத்தி மொழியில் சடலம் என்பதை குறிப்பதாகும்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சரியாக தற்போது என்ன நடக்கிறது? ‘சாவ் சேனா’ பீகார் தேர்தலில் தனது சக கூட்டாளியை(காங்கிரஸ்) கொன்றுவிட்டது.

அவர்கள் மராட்டியத்தை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் பீகாரை சரியான இடத்தில் வைத்ததற்கு நன்றி“ என கூறியுள்ளார்.

பதிலடி

இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவசேனா செய்தி தொடர்பாளர் நீலம் கோரே வெளியிட்ட பதிவில், அம்ருதா பட்னாவிஸ் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள்ள முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

அவருடைய பெயரில் “ஏ“ என்ற வார்த்தை இல்லை என்றால் “மிருதா“(மராத்தியில் இறப்பு என பொருள்) என்று வரும். உங்கள் பெயரில் உள்ள “ஏ“ என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை உணருங்கள் அம்ருதா.

தீபாவளி விழா புனித சமயத்தில் உங்கள் மனதில் கெட்ட எண்ணங்களை கொண்டுவர வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story