அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜனதா எதிர்க்கட்சியாக தான் இருக்கும் சஞ்சய் ராவத் விமர்சனம்


அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜனதா எதிர்க்கட்சியாக தான் இருக்கும் சஞ்சய் ராவத் விமர்சனம்
x
தினத்தந்தி 13 Nov 2020 7:15 PM GMT (Updated: 13 Nov 2020 7:15 PM GMT)

அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜனதா எதிர்க்கட்சியாக தான் இருக்கும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை, 

பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா, அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் அன்வய் நாக்கின் குடும்பத்தினரிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மனைவி நிலம் வாங்கியதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. ஆவேசமாக பதில் அளித்து உள்ளார். அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜனதா எதிர்க்கட்சியாக தான் இருக்கும் என கூறியுள்ளார்.

வழக்கை திசை திருப்ப...

மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

அன்வய் நாயக்கின் மனைவி மற்றும் மகள் நீதிக்காக போராடி வருகிறார். அவர்களுக்கு நீதிகிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆனால் இவர்கள் தற்கொலை வழக்கின் விசாரணையை திசைத்திருப்ப இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இது தீவிரமான விவகாரம் ஆகும்.

மகாவிகாஸ் கூட்டணி தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்யும். மராட்டியத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பா.ஜனதாவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கவிடாமல் செய்வதை நாங்கள் உறுதி செய்வோம். அன்வய் நாயக்கின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. மேலும் அவரை தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு சட்டத்தின்படி தண்டனை வாங்கி தருவோம். பா.ஜனதாவினர் குற்றவாளியை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். உங்களால் குற்றவாளிகளுடன் எப்படி தொடர்பில் இருக்க முடிகிறது?. தற்கொலை செய்து கொண்ட தாய், மகனை பற்றி உங்களுக்கு கவலை இல்லையா?.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story