கள்ளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கள்ளக்குறிச்சி அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2020 11:30 PM GMT (Updated: 14 Nov 2020 7:05 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறால் 2 குழந்தைகளுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ளது கல்வராயன் மலை. இந்த மலையில் மன்னார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது28). விவசாயி. இவரது மனைவி ரேவதி(27). இவர்களுக்கு புஷ்பலதா(5), யமுனா(2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன. மேலும் தற்போது ரேவதி 4 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஈஸ்வரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சிறு பிரச்சினை தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ரேவதி கணவனிடம் கோபித்துக் கொண்டு அருகில் உள்ள மேல்ழாத்துகுழி கிராமத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் தாய் வீட்டுக்கு செல்லவில்லை.

இதனால் பதறிப்போன ஈஸ்வரன் உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் மனைவி, குழந்தைகளை தேடிப்பார்த்தார். ஆனால் எங்கேயும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் மலைப் பகுதியிலுள்ள விவசாய நிலத்திற்கு உறவினர்களுடன் சென்று ஈஸ்வரன் பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே ரேவதி மற்றும் குழந்தைகளின் செருப்புகள் சிதறிக்கிடந்தன.

இதனால் பதறிப்போன அவர், தனது உறவினர்கள் சிலருடன் கிணற்றில் குதித்து மனைவி, குழந்தைகளை தேடினார். அப்போது, ரேவதியும், குழந்தைகள் புஷ்பலதா, யமுனா ஆகியோரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் காரியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ரேவதி தனது குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story