பாலத்தில் உட்கார்ந்த தனியார் நிறுவன காவலாளி தலைகுப்புற விழுந்து பலி - உடலை ஊருக்கு கொண்டு சென்ற உறவினரும் மயங்கி விழுந்து சாவு


பாலத்தில் உட்கார்ந்த தனியார் நிறுவன காவலாளி தலைகுப்புற விழுந்து பலி - உடலை ஊருக்கு கொண்டு சென்ற உறவினரும் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 18 Nov 2020 6:30 AM GMT (Updated: 18 Nov 2020 6:21 AM GMT)

பாலத்தில் உட்கார்ந்திருந்த தனியார் நிறுவன தொழிலாளி தலைகுப்புற விழுந்து பலியானார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்ற உறவினரும் மயங்கி விழுந்து இறந்தார்.

சென்னிமலை, 

தஞ்சாவூர் டவுன், பள்ளி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவருடைய மகன் இளவரசன் (வயது 30). திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த ஒரு ஆண்டாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் வெட்டுக்காட்டுவலசு பகுதியில் தங்கி இருந்து பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து சென்ற போது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகே தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு பாலத்தின் மேல் உட்கார்ந்து உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து சுமார் 5 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

நேற்று முன்தினம் அந்த வழியே சென்றவர்கள் மோட்டார்சைக்கிள் தனியே நிற்பதை கண்டனர். பின்னர் பாலத்தின் அருகில் சென்று பார்த்தபோது தலைகுப்புற விழுந்த நிலையில் இளவரசன் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளவரசனின் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், பெருந்துறையில் இருந்து தஞ்சாவூருக்கு இளவரசனின் உடலை அவருடைய உறவினர்களான மணிகண்டன் (38), சோழராஜன், பவுன்ராஜ் ஆகியோர் நேற்று ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். கொடுமுடியை அடுத்த நொய்யல் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று மணிகண்டன் மயக்கமடைந்து சாய்ந்து விட்டார். உடனே அவரை அதே ஆம்புலன்சில் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் இறந்துவிட்டார் என்று கூறினார்கள்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் எதனால் இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவரின் உடலை கொண்டு செல்ல வந்தவர் மயங்கி விழுந்து இறந்தது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story