பா.ஜ.க. கை காட்டுபவர்தான் தமிழக முதல்-அமைச்சராக இருக்க போகிறார் - வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு


பா.ஜ.க. கை காட்டுபவர்தான் தமிழக முதல்-அமைச்சராக இருக்க போகிறார் - வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 18 Nov 2020 9:00 AM GMT (Updated: 18 Nov 2020 8:46 AM GMT)

பா.ஜ.க. கை காட்டுபவர்தான் தமிழக முதல்-அமைச்சராக இருக்க போகிறார் என வேல் யாத்திரை கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேசினார். திருவண்ணாமலையில் நடந்த வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது:-

திருவண்ணாமலை,

கொரோனா காலத்தில் மக்களுக்காக பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை பாராட்டவும், கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை ஒழிக்கவும், மத்திய அரசின் திட்டங்களை மக்களிடையே எடுத்து கூறவும் தான் வேல் யாத்திரை கடந்த 6-ந் தேதி திருத்தணியில் தொடங்கப்பட்டது. வருகிற டிசம்பர் 7-ந் தேதி வேல் யாத்திரை திருச்செந்தூரில் முடிவடைகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கூறுகிறார்கள். கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பக்தர்கள் வந்தால்தான் கோவில் முழுமை அடையும். இதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறேன். கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். நாம் இந்த யாத்திரை மூலம் விரட்டி அடிப்போம். இந்த யாத்திரையானது அறுபடை வீடுகளுக்கும் செல்ல உள்ளது. அதுமட்டுமின்றி முருகன் உள்ள ரத்தினகிரி உள்ளிட்ட கோவில்களுக்கும் செல்ல உள்ளோம். தற்போது சஷ்டி விரதம் ஆரம்பித்து உள்ளது. 20-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். அப்போது அசுரர்களை அழித்து தேவர்களை முருகன் காப்பாற்றுவார். அதுபோல் தீயதை அழித்து நல்லதை அவர் காப்பாற்றுவார்.

இது மாற்றத்திற்கான நேரம். கந்தசஷ்டியை அவமதித்த கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளார். அவர் மட்டுமின்றி அவர்களது கூட்டணி கட்சியினரும் உள்ளனர். நரேந்திர மோடி ஊழல் அற்ற நல்லாட்சி செய்து வருகிறார். அதனால் தான் தற்போது பா.ஜ.க.வின் பின்னால் இளைஞர்களும், சகோதரிகளும் வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லட்சம் விவசாயிகள் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை மத்திய அரசால் பெற்று பயனடைந்து உள்ளனர். அதுமட்டுமின்றி மத்திய அரசின் அதிகபடியான திட்டங்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் பா.ஜ.க.வினால் ரூ.1 கோடி அளவுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. 40 லட்சம் பேருக்கு உணவு பொருட்கள் தடையின்றி தொடர்ந்து வழங்கி உள்ளோம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். நாம் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான எம்.எல்.ஏ.க்களை பெற்று பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் தலைமையில் ஆட்சி அமைத்து, நாம் கை காட்டுபவர் தான் முதல் அமைச்சராக இருக்க போகிறார். அதற்கு நாம் அனைவரும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இந்த யாத்திரை எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து செல்லும். வருகிற 7-ந் தேதி இந்த யாத்திரை திருச்செந்தூரில் முடிவடைய உள்ளது. திருச்செந்தூருக்கு அனைவரும் வாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story