வீட்டில் சேர்க்க உறவினர்கள் மறுப்பு: காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்தனர் - பெண் சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை


வீட்டில் சேர்க்க உறவினர்கள் மறுப்பு: காதல் திருமணம் செய்த தம்பதி விஷம் குடித்தனர் - பெண் சாவு; கணவருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 18 Nov 2020 2:00 PM GMT (Updated: 18 Nov 2020 1:52 PM GMT)

காதல் திருமணம் செய்த தம்பதியை வீட்டில் சேர்க்க உறவினர்கள் மறுத்ததால் விஷம் குடித்தனர். அவர்களில் பெண் பரிதாபமாக இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கடவூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தனியாக வசித்து வந்த கார்த்திகேயன், அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மகள் காமாட்சி (32) என்பவரை காதலித்து 2-ம் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்தநிலையில், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர். ஆனால், அவர்களை உறவினர்கள் வீட்டில் சேர்க்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இருவரும் அரளி விதையை(விஷம்) அரைத்து குடித்து விட்டு மயங்கி கிடந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே காமாட்சி உயிரிழந்தார். கார்த்திகேயன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாலவிடுதி போலீசில், மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காமாட்சிக்கு திருமணமாகி சில மாதங்களே ஆவதால் குளித்தலை ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story