திருவாரூர், நன்னிலத்தில் 43 மில்லி மீட்டர் மழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


திருவாரூர், நன்னிலத்தில் 43 மில்லி மீட்டர் மழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2020 3:00 PM GMT (Updated: 18 Nov 2020 2:52 PM GMT)

திருவாரூர், நன்னிலத்தில் 43 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருவாரூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 5-வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. தீபாவளி பண்டிகை விடுமுறையில் இருந்து மீண்டு வரும் முன்பு கன மழை பெய்வதால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கட்டுமான பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தது. இதனால் தொழிலாளிகள் வேலை இழந்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவாரூர், நன்னிலத்தில் 43 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:- திருவாரூர்-43, நன்னிலம்-43, வலங்கைமான்-34, குடவாசல்-31, நீடாமங்கலம்-21, முத்துப்பேட்டை-15. பாண்டவயாறு தலைப்பு-13, மன்னார்குடி-9, திருத்துறைப்பூண்டி-2.

Next Story