பலத்த மழையால் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு: பிச்சாட்டூர் அணை நீர் சோதனை முறையில் திறந்து மூடல் வெள்ள அபாயம் நீங்கியது


பலத்த மழையால் நீர் மட்டம் கிடு கிடு உயர்வு: பிச்சாட்டூர் அணை நீர் சோதனை முறையில் திறந்து மூடல் வெள்ள அபாயம் நீங்கியது
x
தினத்தந்தி 18 Nov 2020 11:23 PM GMT (Updated: 18 Nov 2020 11:23 PM GMT)

பிச்சாட்டூர் அணைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அதைத்தொடர்ந்து,சோதனை முறையில் அணையில் இருந்து 400 கனஅடி நீரை திறக்கப்பட்டு அதிகாரிகள் மூடினர்.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. 31 அடி உயரம் கொண்ட இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நந்தனம், காரணி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, கிருஷ்ணாபுரம் வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது.

மழை பொய்த்துப் போனதால் இந்த அணை கடந்த 10 வருடங்களாக வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை வரை அணையின் நீர்மட்டம் 29 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 10 வருடங்களுக்கு முன் பலத்த மழை பெய்த போது அணை முழுதுமாய் நிரம்பியது.

அப்போது தண்ணீர் திறந்துவிட மதகுகள் திறக்க முயற்சி செய்தனர். ஆனால் திறக்காததால் வேறு வழியின்றி குண்டுகளை வைத்து மதகுகளை தகர்த்தனர். அதன்பிறகு கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் புதிய மதகுகள் அமைத்தனர். தற்போது அணை முழுவதுமாக நிரம்பும் நிலையில் உள்ளதால் தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனால் ஆரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு சோதனை முறையில் இரண்டு மதகுகள் திறந்து விட்டனர். சத்தியவேடு எம்.எல்.ஏ. ஆதிமூலம் சிறப்பு பூஜைகளை நடத்தி தண்ணீரைத் திறந்து விட்டார்.இதில் ஆந்திரா பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. சோதனை முறையில், திறந்து விட்டு பின்னர் 11 மணிக்கு அணை மூடப்பட்டது. இதனால் வெள்ள அபாயம் நீங்கியது.

தண்ணீர் திறப்பு தொடர்ந்திருந்தால் ஊத்துக்கோட்டையில் உள்ள தரைப்பாலம் மூழ்கி வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு இருக்கும்.

Next Story