சாலை தடுப்பு சுவர் மீது மோதியது தனியார் பஸ் விபத்தில் 17 பேர் காயம்


சாலை தடுப்பு சுவர் மீது மோதியது தனியார் பஸ் விபத்தில் 17 பேர் காயம்
x
தினத்தந்தி 19 Nov 2020 3:57 AM GMT (Updated: 19 Nov 2020 3:57 AM GMT)

நவிமும்பையில் சாலை தடுப்பு சுவரில் தனியார் பஸ் மோதிய விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர்.

நவிமும்பை, 

நவிமும்பை வழியாக தானேயில் உள்ள பத்லாப்பூரை நோக்கி நேற்று தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. காலை 6 மணி அளவில் கமோதே பகுதியை நெருங்கியபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பஸ்சில் இருந்த டிரைவர் உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயத்தால் துடித்து கொண்டு இருந்த 17 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தில் காயம் அடைந்த அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story