மேற்குதொடர்ச்சி மலையில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது


மேற்குதொடர்ச்சி மலையில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு - அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 19 Nov 2020 4:15 PM GMT (Updated: 19 Nov 2020 4:24 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்தமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலைவெள்ளம் சூழ்ந்துள்ளது.

தளி,

உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழை பெய்யும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல் உருவாகி விடுகிறது.

வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது. இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் ஒருவித நறுமணத்தையும் அளிக்கிறது. அருவியில் குளிப்பதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது.

இதனால் அதில் குளித்து புத்துணர்வு வருவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் நீர்வரத்து கூடுவதும் பின்பு குறைவாக இருந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி நேற்று முன்தினம் இரவு அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட மும்மூர்த்திகள் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குன்று சப்தகன்னிமார் கோவிலை சூழ்ந்த வாறு திருமூர்த்தி அணையை அடைந்தது. அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உண்டியலை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டியிருந்தனர். மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Next Story