மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் டெங்கு நோய் விழிப்புணர்வு முகாம்


மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் டெங்கு நோய் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 20 Nov 2020 2:16 AM GMT (Updated: 20 Nov 2020 2:16 AM GMT)

மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் டெங்கு நோய் விழிப்புணர்வு முகாம் கொசுப்புழுக்களை அழிக்கும் கம்பூசியா மீன்கள் குறித்து விளக்கம்.

சென்னை, 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு, நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் மழைக்காலத்தையொட்டி டெங்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநகராட்சி உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி பொது சுகாதாரத்துறை விழிப்புணர்வு முகாம்களை குடியிருப்பு பகுதிகளில் நடத்த திட்டமிட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக கொசுப்புழுக்களை அழிக்கும் கம்பூசியா, மாலி மீன்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.

சென்னை கொளத்தூர் அஞ்சுகம் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்த விழிப்புணர்வு முகாமில், கொசுப்புழுக்களை அழிக்கும் கம்பூசியா, மாலி மீன்கள் குறித்து பொதுமக்களுக்கு சுகாதார ஆய்வாளர் சங்கர் விளக்கம் அளித்தார். மேலும் நீர் தொட்டிகள், கிணறுகள் போன்றவற்றில் இவ்வகை மீன்களை வளர்க்கலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “மழைக்காலங்களில் வீடுகளின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவது வாடிக்கை தான். ஆனால் தேங்கும் மழைநீரில் தான் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. நன்னீரில் உருவாகும் இவ்வகை கொசுக்கள் டெங்கு போன்ற கொடிய நோய்களை பரப்புகின்றன. எனவே வீடுகளை சுற்றிலும் நீர் தேங்காத வகையில் பொதுமக்கள் பார்த்துக்கொள்வது அவசியம்”, என்றனர்.

Next Story