தி.மு.க.வினர் சாலை மறியல் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 270 பேர் கைது


தி.மு.க.வினர் சாலை மறியல் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 270 பேர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2020 5:16 AM GMT (Updated: 21 Nov 2020 5:16 AM GMT)

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 3 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 270 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்,

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே வாணியம்பாடி மெயின் ரோட்டில் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட நல்லதம்பி எம்.எல்.ஏ., கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அன்பழகன், முன்னாள் நகரமன்ற தலைவர் அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், துணை அமைப்பாளர் ஆர்.தசரதன், நகர இளைஞரணி அமைப்பாளர் மாதேஸ்வரன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆற்காட்டில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆற்காடு டவுன் போலீசார், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஒள்பட 30 பேரை கைது செய்தனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து ஆம்பூர் பைபாஸ் ரோட்டில் வில்வநாதன் எம்.எல்.ஏ. மற்றும் ஆனந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் ஜோலார்பேட்டை நகரம் மற்றும் கிழக்கு ஒன்றியம் சார்பில் நகர பொறுப்பாளர் ம.அன்பழகன் தலைமையிலும், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.

வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நகர தி.மு.க. பொறுப்பாளர் சாரதிகுமார் தலைமையில் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று இரவு தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். குடியாத்தம் ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர் ரவி, டி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் எஸ்.பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன், ஒன்றிய துணை செயலாளர் என்.இ.சத்யானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்தனர்.


Next Story