மாவட்டத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு


மாவட்டத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Nov 2020 6:06 AM GMT (Updated: 21 Nov 2020 6:06 AM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

காளையார்கோவில்,

காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலில் காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். தொடர்ந்து நிலஅளவை பிரிவு பகுதியில் கணினியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

காளையார்கோவில் வட்டம் சிலுக்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேலமருங்கூர் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அக்கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அம்மாசி என்பவரது வீடு இடிந்தது. அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் கூலி தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5ஆயிரம் நிவாரண தொகை மற்றும் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். தொடர்ந்து இளையான்குடிக்கு சென்ற கலெக்டர் அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், வட்டாட்சியர்கள் ஜெயலெட்சுமி, ரமேஷ், பஞ்சாபிகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு நடத்தினார். அவரை எஸ்.புதூர் ஒன்றிய சேர்மன் விஜயா குமரன் வரவேற்றார். அதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் தனித்தனி துறை அலுவலர்களிடம், நடைபெற்று வரும் பணிகள், நடந்து முடிந்த பணிகள், அலுவலக கோப்புகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின் போது மேலவண்ணாரிருப்பு ஊராட்சி தலைவர் ஜோதி பித்திரை செல்வம் தங்கள் பகுதியில் உள்ள நீண்ட நாள் கோரிக்கையான செல்போன் கோபுரம் அமைக்க கோரிக்கை மனு கொடுத்தார். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் வடிவேல், எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரதீப், திருநாவுக்கரசு, துணை சேர்மன் வீரம்மாள் பழனிசாமி, மேலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பணிகளை ஆய்வு செய்தார். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையர் பத்மநாபன், ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் கலெக்டரை வரவேற்றனர். தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகிழ மரக்கன்றுகளை கலெக்டர் நட்டு வைத்தார்.

இந்த ஆய்வின் போது சிங்கம்புணரி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா பிரபு, மாவட்ட கவுன்சிலரும் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணை செயலாளருமான பொன்மணி பாஸ்கரன், அ.தி.மு.க. சிவகங்கை மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு, எஸ்.புதூர் ஒன்றிய கிழக்கு செயலாளர் கருப்பையா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரண்யா ஸ்டாலின், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, பெரிய கருப்பி முத்தன், கலைச்செல்வி அன்புச்செழியன், ரம்யா செல்வகுமார், உமாசோணமுத்து, உதயசூரியன், சசிகுமார், இளங்குமார் மற்றும் பொறியாளர்கள் செல்லையா, சிவகுமார் அலுவலக மேலாளர்கள் அருள் பிரகாசம், சுகுமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story