திருவேங்கடம் அருகே, தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண் தூக்குப்போட்டு சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக அக்காள்-தங்கை கைது


திருவேங்கடம் அருகே, தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண் தூக்குப்போட்டு சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக அக்காள்-தங்கை கைது
x
தினத்தந்தி 21 Nov 2020 10:30 PM GMT (Updated: 21 Nov 2020 4:58 PM GMT)

திருவேங்கடம் அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அக்காள்-தங்கையை போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடம்,

தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த கீழ திருவேங்கடம் வடக்கு பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சமுத்திரவேல் (வயது 57). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன், ஆந்திர மாநிலத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கணேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டி மனைவி விஜயா (60), குருசாமி மனைவி கனகவல்லி (42). விஜயாவும், கனகவல்லியும் அக்காள்-தங்கை ஆவர். விஜயா, அங்குள்ள பள்ளிக்கூடத்தில் சமையலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கனகவல்லி, திருவேங்கடத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார்.

அப்பகுதியில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக விஜயா, கனகவல்லி ஆகியோருக்கும், சமுத்திரவேலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது விஜயா, கனகவல்லி ஆகிய 2 பேரும் சேர்ந்து சமுத்திரவேலை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சமுத்திரவேல் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த சமுத்திரவேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சமுத்திரவேலை அவதூறாக பேசி, தற்கொலைக்கு தூண்டியதாக விஜயா, கனகவல்லி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்துப்பட்டு, நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story