‘வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேட்டி


‘வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்’ முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 21 Nov 2020 9:30 PM GMT (Updated: 21 Nov 2020 6:45 PM GMT)

‘வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்‘ என்று முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. கூறினார்.

தென்காசி,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று தென்காசியில் நடந்தது. மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் முகமது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இக்பால் வரவேற்றார்.

கூட்டத்தில் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள் 52 மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் வருகிற 2021 தேர்தலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வருகிற பிப்ரவரி மாதம் மாநில மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கிறோம். வருகிற பிப்ரவரி மாதம் தமிழகத்தின் மையப்பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அந்த மாநாட்டிற்கு தென்காசி மாவட்டத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் செல்லும் அளவிற்கு ஏற்பாடு செய்ய கூட்டணி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றிக்கு பாடுபடுவது, கடையநல்லூர் தொகுதியில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட கேட்டுக்கொள்வது, தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி மருத்துவ கல்லூரி அமைக்க கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நகர தலைவர் அபுபக்கர், செயலாளர் முகம்மது முஸ்தபா, தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி முகமது அலி, அமைப்பு செயலாளர் முதலியார்பட்டி அப்துல்காதர், உலமாக்கள் சபை மாவட்ட தலைவர் சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மீரான்மைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் பாட்டபத்து முகமது அலி, பொருளாளர் காணாகத்து மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் கோதர் மைதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். நிர்வாகிகள் எம்.கே.எம்.முகமதுஷாபி, கடாபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், “2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். பாளையங்கோட்டை தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட வேண்டும் என்று மேலிடத்தில் விருப்பம் தெரிவித்து உள்ளோம்“ என்றார்.

Next Story