தீபாவளி பண்டிகைக்கும் வீட்டுக்கு வராததால் ஆத்திரம் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் போலீஸ்காரர் தற்கொலை


தீபாவளி பண்டிகைக்கும் வீட்டுக்கு வராததால் ஆத்திரம் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் போலீஸ்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Nov 2020 9:45 PM GMT (Updated: 22 Nov 2020 1:00 AM GMT)

பணியின் காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடவும் வீட்டுக்கு வராததால் ஆத்திரத்தில் மனைவி கோபித்து சென்றதால் விரக்தி அடைந்த போலீஸ்காரர், தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க.நகர், 

சென்னை அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கணேஷ்(வயது 28). இவர், பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள 13-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

தீபாவளி பண்டிகை அன்று கணேஷ், பணி நிமித்தமாக பண்டிகையை கொண்டாட வீட்டுக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசி, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகனுடன் சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் பணி முடிந்து சென்னீர்குப்பத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் கணேஷ், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த கணேஷ், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது தாயார் மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் கணேசின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story