வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் - வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் - வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
x
தினத்தந்தி 22 Nov 2020 6:23 AM GMT (Updated: 22 Nov 2020 6:23 AM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது.

ஈரோடு, 

தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. முன்னதாக கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 பேர் கொண்ட பட்டியலை ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து புதிய வாக்காளர்கள் சேர்க்கை, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், 21 மற்றும் 22-ந் தேதி (இன்று) வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அறிவித்தார். அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 215 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இடையன்காட்டுவலசு உயர்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடம், திருநகர் காலனி, வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்தது.

இந்த பணிகளை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் பார்வையிட்டார். பொதுமக்களிடம் உரிய விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றனவா? அவை முறையான ஆவணங்களுடன் பெறப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறதா? என்பவை பற்றி அவர் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

நேற்று அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலரும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து விண்ணப்பங்கள் வழங்கினார்கள். வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், பெயர் மற்றும் முகவரித் திருத்தம் மற்றும் பெயர் நீக்கலுக்கான படிவங்களை வழங்கினார்கள். முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதுபோல் வருகிற டிசம்பர் மாதம் 12, 13-ந் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்தி வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story