வீரவநல்லூரில், தொழிலாளி மர்ம சாவு - போலீசார் விசாரணை


வீரவநல்லூரில், தொழிலாளி மர்ம சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Nov 2020 9:30 PM GMT (Updated: 22 Nov 2020 9:55 PM GMT)

வீரவநல்லூரில் திருப்பூர் பனியன் நிறுவன தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேரன்மாதேவி,

திருப்பூர் மாவட்டம் குளத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர் அரசகுமார் (வயது 48). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசகுமார் நெல்லை மாவட்டம் வீரவநல்லூருக்கு வந்தார். அங்கு அவரது நண்பரான ராம்குமார் என்பவரது வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம் அரசகுமார் அறையில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வீரவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேரன்மாதேவி அருகே உள்ள கங்கணான்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் (55). காண்டிராக்டரான இவருக்கு பசுங்கிளி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், இதை கைவிடுவதற்காக மருந்து சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவரால் மதுகுடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முருகன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story