வேப்பூர் அருகே சாப்பாடு ருசியாக இல்லாததால் பெண் அடித்துக் கொலை கணவர் கைது


வேப்பூர் அருகே சாப்பாடு ருசியாக இல்லாததால் பெண் அடித்துக் கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2020 3:46 AM GMT (Updated: 23 Nov 2020 3:46 AM GMT)

வேப்பூர் அருகே சாப்பாடு ருசியாக இல்லை என்று கூறி பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 77). விவசாயி. இவரது மனைவி கலியம்மாள்(60). சாப்பாடு ருசியாக சமைத்து தருவதில்லை என கூறி தங்கவேல் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. நேற்றும் சாப்பாடு ருசியாக இல்லை எனவும், குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறும் தங்கவேல் கூறியுள்ளார்.

ஆனால் கலியம்மாள் தண்ணீர் கொண்டு வர தாமதமானது. இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தங்கவேல், தனது மனைவி என்றும் பராமல் அவரை அடித்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் சுவற்றில் தலை மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொலை ஆகாத மரணம் விளைவித்தல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர்.

Next Story