சாத்தான்குளம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை


சாத்தான்குளம் பகுதியில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Nov 2020 4:48 PM GMT (Updated: 24 Nov 2020 4:48 PM GMT)

சாத்தான்குளம் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சாத்தான்குளம், 

சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் மேலத்தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கிருபா (வயது 47). இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கிருபாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கிருபாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேலாண்மை படிப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 8 மாதமாக ஊரில் இருந்து வந்தார். ஆன்லைனில் வகுப்பு நடந்து வந்ததில் அவருக்கு படிக்க விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மற்றொரு சம்பவம்

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் கருமேனி ஆற்றுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். போலீசார் விசாரணையில், அந்த நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இந்த 3 சம்பவங்கள் குறித்தும் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story