கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி அவினாசி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் தர்ணா


கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி அவினாசி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 26 Nov 2020 12:58 PM GMT (Updated: 26 Nov 2020 12:58 PM GMT)

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி அவினாசி போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவினாசி, 

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ஒலப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை தனபால் திருமணம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமியின் தாயார் அவினாசி மகளிர் போலீசில் தனபால் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் தனபால் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையில் ஒலப்பாளையம் பகுதியை சேர்ந்த மயில்சாமி, பழனிசாமி, மற்றொரு தனபால் ஆகிய 3 பேரும் தனபாலை தாக்கி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் அவினாசி போலீசாரிடமிருந்து தனபால் தப்பி ஓடி விட்டார்.

போலீஸ் நிலையம் முன்பு தர்ணா

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஒலப்பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவினாசி போலீஸ் நிலையம் முன்பு நேற்று இரவு 7.30 மணிக்கு ஒன்று திரண்டனர். 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்ய முயல்வது தவறு என்று நியாயம்கேட்டதற்காக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும், அது தொடர்பாக கைது செய்தவர்களை விடுதலை செய்யக்கோரி போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன் மற்றும் குணசேகரன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. அப்போது அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story