திருமானூர் அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு


திருமானூர் அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2020 10:52 PM GMT (Updated: 28 Nov 2020 10:52 PM GMT)

திருமானூர் அருகே அதிகாலையில் கோவிலை சுத்தம் செய்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை காரில் வந்த கும்பல் பறித்து சென்றது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் பிள்ளையின் மனைவி ஞானம்(வயது 86). ராஜாங்கம் பிள்ளை ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் ஞானம் அப்பகுதியில் கீழராஜ வீதியில் உள்ள அவருடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அவரின் வீட்டிற்கு அருகே உள்ள பிள்ளையார் கோவிலை கழுவி சுத்தம் செய்து, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. காருக்குள் சுமார் 4 பேர் இருந்தனர்.

அதில் ஒருவர் இறங்கி வந்து, ஞானத்திடம் திருநீறு கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஞானம் வழங்கிய திருநீறை எடுத்துக்கொண்டு கார் வரை சென்ற அந்த நபர், மீண்டும் திரும்பி வந்து ஞானத்திடம் சிறிது நேரம் பேச்சு கொடுத்துள்ளார்.

போலீசார்விசாரணை

பின்னர் திடீரென அந்த நபர், ஞானம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் ஏறினார். இதையடுத்து கார் அங்கிருந்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஞானம் கூச்சல் போடவே அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் காரில் வந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார், அங்கு விரைந்து வந்து மர்ம நபர்கள் குறித்து ஞானத்திடம் கேட்டறிந்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு பெண்ணிடம்...

முன்னதாக அந்த மர்ம நபர்கள் அதிகாலை 4 மணி அளவில் கீழப்பழுவூரில் ஒரு வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவர் சுதாரித்துக்கொண்டு, கையை தட்டிவிட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்ததையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர், என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் அதே மர்ம நபர்கள் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த ஊனூர் என்ற கிராமத்திலும் ஒரு பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கீழப்பழுவூர், திருமழபாடி ஆகிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story