கிருஷ்ணகிரி கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு


கிருஷ்ணகிரி கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Nov 2020 4:11 AM GMT (Updated: 29 Nov 2020 4:11 AM GMT)

கிருஷ்ணகிரி கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணம்பள்ளி வெங்கட்ரமண சாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் கோவிலை பாதுகாப்பது, சேதமடைந்த கோவில்களை கண்டறிந்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார். அப்போது சேதமடைந்த கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து துறை வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையர் பிரகாஷ், ஆய்வாளார் ராமமூர்த்தி, செயல் அலுவலர் சாமிதுரை மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

ஓசூர்

ஓசூர் பிரம்ம மலையில் உள்ள கோவில்களை, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பிரம்ம மலை, குகை சிவாலயம், வராகியம்மன் கோவில் மற்றும் பிரம்மதேவர் கோவிலுக்கும், ஸ்ரீ சக்கர ஆலயத்திற்கும் பக்தர்கள் சென்று வர வசதியாக தார்சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள், மாநகராட்சி உதவியுடன் செய்ய வேண்டும். மலைக்கு செல்லும் வழியில் இருபுறமும் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும்.

குகை சிவாலயம் மற்றும் வராகியம்மன் கோவிலில் சித்தர்கள் வழி குருகுலம் அமைக்கவும், மலையை சுற்றி ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்க சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். பிரம்ம மலை அமைந்துள்ள பகுதியை கோவில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மலை பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கோவில் செயல் அலுவலர் ஜோதி மற்றும் சசிகுமார் உள்ளிட்ட பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story