மூலக்குளத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல் 4 பேருக்கு வலைவீச்சு
![மூலக்குளத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல் 4 பேருக்கு வலைவீச்சு மூலக்குளத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல் 4 பேருக்கு வலைவீச்சு](https://img.dailythanthi.com/Articles/2020/Nov/202011300600128770_Enter-the-house-Attacking-the-new-groom-Threatened-to-kill_SECVPF.gif)
மூலக்குளத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல்விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூலக்குளம்,
மூலக்குளம் மோதிலால் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 61), ஒய்வுபெற்ற அரசு அதிகாரி. இவரது மகன் சதீஷ்குமாருக்கும், விழுப்புரம் கோலியனூர் அருகே சாலைஅகரத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகள் சர்மிளா என்பவருக்கும் கடந்த மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த உடன் சதீஷ்குமார் தனது மனைவியின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் அவர் மனைவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சர்மிளா வர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து புதுமாப்பிள்ளை சதீஷ்குமார் தனது வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலசந்திரன், அவரது மனைவி, மகன் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது ஜெயமூர்த்தி, சர்மிளா மற்றும் அவர்களது உறவினர்கள் நந்தகிஷோர், சந்திரசேகர் ஆகிய 4 பேர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலச்சந்திரன், சதீஷ்குமார் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தந்தையும், மகனும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமூர்த்தி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story