ராமநாதபுரம் கோவில் அரச மரத்தில் இயற்கையாக அமைந்துள்ள விநாயகர்-ஆஞ்சநேயர் உருவங்கள்


ராமநாதபுரம் கோவில் அரச மரத்தில் இயற்கையாக அமைந்துள்ள விநாயகர்-ஆஞ்சநேயர் உருவங்கள்
x
தினத்தந்தி 30 Nov 2020 4:54 AM GMT (Updated: 30 Nov 2020 4:54 AM GMT)

ராமநாதபுரம் நகர் வெளிபட்டிணம் பகுதியில் அமைந்துள்ள பண்டரிநாதர் கோவில் அரச மரத்தில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் உருவங்கள் இயற்கையாக அமைந்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் நுழைவுவாயில் அருகில் அமைந்துள்ள மற்றொரு கோவில் பண்டரிநாதர் கோவில். ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் அனைவரும் அரச மரத்துடன் அமைந்துள்ள இந்த கோவிலிலும் சாமி கும்பிட்டுவிட்டு செல்வது வழக்கம்.

இந்த பண்டரிநாதர் கோவிலில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசமரத்தில் தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் உருவங்கள் அப்படியே சிலைகள் போல தத்ரூபமாக இயற்கையாக அமைந்துள்ளது. அரச மரத்தின் நடுப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள இந்த 2 சாமி உருவங்களும் சாமி கும்பிட வரும் பக்தர்கள் மட்டுமல்லாது காண்பவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

சிறப்பு பூஜை

அரச மரத்தின் நடுவில் கிழக்கு பகுதியை பார்த்தவாறு தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் உருவமும், மேற்கு பகுதியில் ஆஞ்சநேயர் உருவமும் சிலையாக செதுக்கி வைத்ததுபோன்று இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த உருவங்களை கண்ட பக்தர்கள் மாலையிட்டு அர்ச்சனை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சென்று வருகின்றனர்.

அரச மரத்தில் இயற்கையாக அமைந்துள்ள இந்த 2 சாமி உருவங்களை கேள்விப்பட்டு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டு செல்கின்றனர். இதன்காரணமாக வார நாட்களில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை மற்றும் வெண்ணெய் சாத்தி சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகிறது.

Next Story