அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 3-வது சோமவார விழா


அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 3-வது சோமவார விழா
x
தினத்தந்தி 1 Dec 2020 1:20 AM GMT (Updated: 1 Dec 2020 1:20 AM GMT)

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 3-வது சோமவார விழா நடைபெற்றது. இதில் மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கார்த்திகை சோமவார விழா நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கும் மக்கள் விரதம் இருப்பதுபோல, இந்த சோமவார தினத்தன்று சிவபெருமானை வேண்டி விரதம் இருந்து மலையேறி அவரை தரிசனம் செய்துவந்தால் சகல நண்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதன்காரணமாக இங்கு நடைபெறும் 5 சோமவார தினத்தன்றும் பல்வேறு ஊர்களில் மட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் வசிக்கும் இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்குவந்து மலைமேல் வீற்றிருக்கும் ரெத்தினகிரீஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.

தேங்காய் உடைத்து வழிபாடு

அதுபோல இந்த ஆண்டு இக்கோவிலில் முதல் சோமவாரம் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இந்தநிலையில் 3-வது சோமவார விழாவிற்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குளித்தலை பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் தங்களின் விரதத்தை முடிப்பதற்காக 1017 படிகள் கொண்ட இக்கோவிலின் மலை அடிவாரத்தில் உள்ள பாறைகளில் தாங்கள் கொண்டுவந்த பூ, வாழைப்பழங்கள், மாவிளக்கு உள்பட பல பொருள்களை வைத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

பலர் தங்களது விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த நெல், கடலை, மிளகாய், கம்பு, உள்பட பல பொருட்களை கொண்டுவந்து கோவில் படிக்கட்டுகள், மலையைச்சுற்றி கொட்டி வழிபட்டனர். மேலும் நேற்று கோவிலுக்கு வந்து வழிபட்ட பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்த காரணத்தால், குளித்தலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story