விமானம், ரெயில்வேயை போன்று விவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்க மத்திய அரசு முயற்சி


விமானம், ரெயில்வேயை போன்று விவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்க மத்திய அரசு முயற்சி
x
தினத்தந்தி 1 Dec 2020 3:05 AM GMT (Updated: 1 Dec 2020 3:05 AM GMT)

விமானம், ரெயில்வேயை போன்று விவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

வடுவூர்,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னார்குடியை அடுத்த மேலத்திருபாலக்குடியில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், தேங்காய் நாரை கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்று தேங்காய் நாரில் பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்தும், பொருட்களை சந்தைப்படுத்தும் விதம் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அங்கு திரண்டு இருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் உதயநிதி ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர்.

வடுவூரில் உள்ள விளையாட்டு அரங்கிற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்த விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்க முயற்சி

மத்திய அரசு நிறைவேற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர், விமானம், ரெயில்வே நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைத்தது போல் விவசாயத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை நுழைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. மாநில அரசு, விவசாயிகளின் கோரிக்கையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால் ஆளும்கட்சி காவல் துறையினரை வைத்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது இருந்த எழுச்சி தற்போதும் மக்களிடம் உள்ளது. நடைபெற உள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் திருவாரூரில் நடந்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

Next Story