பா.ஜ.க.வில் இணைவதாக சொல்வது வதந்தி: சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் - மு.க.அழகிரி பேட்டி


பா.ஜ.க.வில் இணைவதாக சொல்வது வதந்தி: சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் - மு.க.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2020 9:00 AM GMT (Updated: 2 Dec 2020 8:52 AM GMT)

பா.ஜ.க.வில் நான் இணைவதாக சொல்வது வதந்தி என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் எனவும் மு.க.அழகிரி கூறினார்.

மதுரை,

தி.மு.க. நிர்வாகி எஸ்ஸார் கோபியின் சகோதரர் நல்லமருது, கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று சென்றார்.

அங்கு நல்லமருது படத்திற்கு மாலை அணிவித்து, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரியை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: புதிய கட்சி எப்போது தொடங்குவீர்கள்? உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?

பதில்:- என் அரசியல் நிலைப்பாடு பற்றி விரைவில் ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். வருகிற சட்டசபை தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

கேள்வி:- பா.ஜ.க.வில் நீங்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- அது வதந்தி.

கேள்வி:- உங்களது மகன் துரைதயாநிதிக்கு தி.மு.க.வில் பதவி தரப்போவதாக தகவல் வருகிறதே?

பதில்:- அப்படி யார் சொன்னது?.

இவ்வாறு மு.க.அழகிரி பதில் அளித்தார்.

Next Story