ராஜபாளையத்தில், தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை குத்திக்கொன்ற மகன்


ராஜபாளையத்தில், தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை குத்திக்கொன்ற மகன்
x
தினத்தந்தி 2 Dec 2020 9:15 AM GMT (Updated: 2 Dec 2020 9:04 AM GMT)

தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்தவரை கத்தியால் குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 52). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாடசாமி. அவருடைய மனைவி மாரியம்மாள் (45). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

மாடசாமி பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாரியம்மாள், மகன்களுடன் ஊரில் வசித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு, ராமருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்தனர். இதையறிந்து மாரியம்மாளின் மகன் மாடசாமி மதன் (25) மற்றும் உறவினர்கள் கண்டித்தனர்.

இருப்பினும் மாரியம்மாளுடனான தொடர்பை ராமர் கைவிடவில்லை. பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் மாடசாமி மதன் ஆத்திரம் அடைந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராமர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அவருக்கும், அங்கு வந்த மாடசாமி மதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாடசாமி மதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தினார். இதில் அவரது அலறல் சத்தம் கேட்டவுடன், அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் ராமர் கிடந்தார். மாடசாமி மதன் தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமர் இறந்தார்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேசன் தாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாடசாமி மதனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story