அறந்தாங்கியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது


அறந்தாங்கியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2020 12:46 AM GMT (Updated: 3 Dec 2020 12:46 AM GMT)

அறந்தாங்கியில் ஏ.டி.எம். எந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் புகுந்தார். பின்னர் அவர், கல்லால் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் இதனை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,

ரோந்து பணியில் இருந்த அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு, மகளிர் போலீஸ் தங்கராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கைது

பின்னர், போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே, அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவரை அறந்தாங்கி போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், அவர் கறம்பக்குடி அக்ரஹார தெருவை சேர்ந்த சிவக்குமார் (வயது 47) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story