புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிமாவட்ட பேரூராட்சி பணியாளர்கள் குமரி வருகை


புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிமாவட்ட பேரூராட்சி பணியாளர்கள் குமரி வருகை
x
தினத்தந்தி 4 Dec 2020 6:15 AM GMT (Updated: 4 Dec 2020 6:15 AM GMT)

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாவட்ட பேரூராட்சி பணியாளர்கள் குமரி வந்தனர்.

சுசீந்திரம்,

‘புரெவி‘ புயல் உருவானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. பேரிடர் மீட்புக்குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அரசின் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் இயக்குனர் ஆணையின்படி குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மேற்பார்வையில் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கில் இருந்து பொது மக்களை காக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து பேரூராட்சி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்தவர்களை சுசீந்திரம், கன்னியாகுமரி, கணபதிபுரம், ஏழுதேசம், ஆற்றூர், பாகோடு ஆகிய பேரூராட்சிகளில் தங்கவைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுசீந்திரத்தில்...

கடந்த ஒகி புயலின் போது சுசீந்திரம் பழைய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாணுமாலயசாமி கோவில் மற்றும் ஊர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் 2 நாட்கள் பொதுமக்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த புயலில் சுசீந்திரம் பொதுமக்கள் பெரிதும் பாதிக்காத வண்ணம் இரண்டு முகாம்களை முன்னெச்சரிக்கையாக ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியிலும், கற்காடு பகுதியில் தாழ்வான பகுதியை சேர்ந்த மக்கள் தங்கும் வகையில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருப்பதுடன், பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story