மாவட்டத்தில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த் ஆய்வு


மாவட்டத்தில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த் ஆய்வு
x
தினத்தந்தி 4 Dec 2020 10:30 PM GMT (Updated: 4 Dec 2020 5:13 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் குமார்ஜெயந்த் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் மிதமான மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது

இதனை தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் முதன்மை செயலாளருமான குமார்ஜெயந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அந்த குளத்தையும் பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி, ரெயில்வே கேட் பகுதி, பிரையண்ட்நகர் ஆகிய இடங்களில் மழைநீரை அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். மாநகராட்சி பகுதியில் மழை நீரை வெளியேற்றும் பணிகளை கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாநகராட்சி என்ஜினீயர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், தாசில்தார் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியில் இருந்து 7 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. இதில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுமுகநேரி மெயின் பஜார், பள்ளிவாசல் பஜார், காவல் நிலைய பஸ் நிலைய பஜார் மற்றும் வடக்குத்தெரு, அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரோட்டோரங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. பள்ளிவாசல் பஜாரில் உள்ள பழக்கடை ஒன்றுக்குள் தண்ணீர் சென்றது.

அதேபோல் அடைக்கலாபுரம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தை சுற்றி தண்ணீர் தேங்கியது. அங்கு உள்ள தண்ணீரை ஆறுமுகநேரி நகரப்பஞ்சாயத்து சார்பில், சிறிய ஆயில் என்ஜின் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதேபோல் பஜாரில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினர். ஆனாலும் குளம்போல் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. கடந்த மாதத்தில் இந்த சாலைகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக பக்கவாட்டில் பள்ளங்கள் சுமார் ஒரு அடி வரை உள்ளது. அந்த பள்ளங்களை நெடுஞ்சாலைத்துறை சார்பில், கல் மணல் சேர்த்து போட்டு அதை நிரப்ப வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் ரொட்டிகடை பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள எந்த நேரமும் தண்ணீர் வரக்கூடிய பொது குடிநீர் குழாய் சுற்றி மழைநீர் தேங்கியதால் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

Next Story