வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 9 Dec 2020 2:53 AM GMT (Updated: 9 Dec 2020 2:53 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. 10 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதும் முழுஅடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

பஸ்-ஆட்டோக்கள் ஓடின

பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்றனர். மாவட்டத்தில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் என பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாகை அவுரி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

நாகை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி அருகே கீழையூர்ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழையூர் கடை தெருவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சித்தார்த்தன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கீழையூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் உள்பட 95 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து பின்னர் மாலை விடுவித்தனர்.

திருமருகல்

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் பாபு, விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் பொன்மணி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மருதூர்

வாய்மேடு அருகே மருதூர் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த கோவை. சுப்பிரமணியன், வெற்றியழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேவதி பாலகுரு, முருகானந்தம், விவசாய சங்கத்தை சேர்ந்த வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.

மாட்டு வண்டியில் ஏறி எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டம்

தோப்புத்துறையில் மாட்டு வண்டி, டிராக்டரில் வந்து மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாட்டு வண்டியில் ஏறி நின்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அகமத்துல்லா மற்றும் ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேதாரண்யம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், வாய்மேடு, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்பட்டது.

சிக்கல்

சிக்கலில் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு நாகை ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 66 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக மறியலில் ஈடுபடுவதற் காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையில் அமருவதற்கு வந்த போது அந்த வழியாக வெள்ள சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோரும் காரில் நாகைக்கு சென்றனர். அப்போது சாலையில் இருபுறம் நின்றிருந்த போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தி அமைச்சர்கள் சென்ற காருக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

550 பேர் கைது

சாட்டியக்குடி கடைத்தெருவில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகை மாலி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி மாவட்ட குழு உறுப்பினர்கள் அபூபக்கர், சிவக்குமார், சுபாதேவி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 74 பேரை வலிவலம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கைது செய்து அந்த பகுதியில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story