அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம்


அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Dec 2020 4:58 AM GMT (Updated: 10 Dec 2020 4:58 AM GMT)

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணியால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு,

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் இருந்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பவானி அருகே காலிங்கராயன் பாளையம் பகுதியில் இருந்து பவானி ஆற்று தண்ணீரை நீரேற்றம் செய்து குழாய்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட குளம், ஏரிகளில் தண்ணீரை நிரப்பி நிலத்தடி நீரை செறிவூட்டவும், அதன் மூலம் விவசாய பாசனத்தை மேம்படுத்தவும் இந்த திட்டப்பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதற்காக குழாய்கள் பதிக்கும் பணி திட்டப்பகுதிகளில் நடந்து வருகிறது.

குழாய்கள் போடுவதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பெரிய பள்ளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. குழாய்கள் போடுவதற்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. இதுபோல் ஈரோடு அருகே உள்ள கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தையொட்டிய வாய்க்கால் ஓரமாக அத்திக்கடவு-அவினாசி திட்டக்குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. அங்கு அளவீடு செய்த அதிகாரிகள் வாய்க்கால் ஓரமாக உள்ள 100 மரங்கள் வெட்டப்பட இருப்பதாக தெரிவித்தனர்.

பிடுங்கி நடும் பணி

இதுபற்றிய தகவல் டெக்ஸ்வெலி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன், நிர்வாக இயக்குனர் பி.ராஜசேகர், செயல் இயக்குனர் டி.பி.குமார் ஆகியோர் மரங்கள் வெட்டப்படாமல் காப்பாற்ற மாற்று வழிகள் இருக்குமா என்பதை ஆராய்ந்தனர். டெக்ஸ்வெலி இயக்குனர் உமா ராஜசேகர் தலைமையிலான குழுவினர் ஆலோசனை செய்து மரங்களை வெட்டுவதற்கு முன்பாகவே அவற்றை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடுவது என்று முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, மரங்களை பிடுங்கி நடும் குழுவினருடன் தொடர்பு கொண்டு பணிகளை தொடங்கினார்கள். தற்போது 20 மரங்கள் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டு மாற்று இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள 80 மரங்களையும் பிடுங்கி நட தொடர் பணிகள் நடந்து வருகின்றன.

இதுபற்றி டெக்ஸ்வேலி இயக்குனர் உமா ராஜசேகர் கூறியதாவது:-

டெக்ஸ்வேலி மற்றும் லோட்டஸ் நிறுவனங்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரம் மரங்களை நட்டு வளர்த்து இருக்கிறோம். ஈரோட்டில் உள்ள பசுமை அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு மரக்கன்றுகள் நடவில் அதிக அக்கறை செலுத்தி வருகிறோம். இந்தநிலையில், டெக்ஸ்வேலி வளாகத்தையொட்டிய வாய்க்கால்கரையில் நின்ற 100 மரங்களை வெட்ட இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை உறுதி செய்தபோது மிகவும் கவலை ஏற்பட்டது. இந்த மரங்கள் 7 ஆண்டுகளாக நன்றாக பராமரிக்கப்பட்டு பெரிய மரங்களாக உள்ளன. அவற்றை வெட்டுவது வளர்த்த குழந்தையை வெட்டுவதற்கு சமமானது என்று நினைத்தோம். ஏற்கனவே இதுபோன்று 25 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட்டு 25 மரங்களையும் காப்பாற்றி இருக்கிறோம். அதே முறையில் இந்த 100 மரங்களையும் மாற்று இடத்தில் நடும் பணிகளை செய்து வருகிறோம். வேம்பு, நாவல், புங்கன் என்று பல வகை மரங்கள் உள்ளன. அனைத்தையும் காப்பாற்ற முழு முயற்சி செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story