திருமானூா் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை கிறிஸ்துமஸ் குடிலில் வீச்சு


திருமானூா் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை கிறிஸ்துமஸ் குடிலில் வீச்சு
x
தினத்தந்தி 28 Dec 2020 12:18 AM GMT (Updated: 28 Dec 2020 12:18 AM GMT)

திருமானூர் அருகே பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையை கிறிஸ்துமஸ் குடிலில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் ஆதரவற்ற சிறுவர்களுக்கான காப்பகம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகைையயொட்டி கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அந்த குடிலில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் குடில் உள்ள பகுதிக்கு சென்று பார்த்தபோது, பச்சிளம் பெண் குழந்தை ஒன்று குடிலில் கிடந்தது. இது குறித்து காப்பகத்தினர் திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த குழந்தை பிறந்த 3 நாட்களே ஆகியிருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை குடிலில் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை வலைவீசி தேடி வருகின்றனர். அதுவரை குழந்தையை காப்பகத்திலேயே வைத்திருங்கள் என்று போலீசார் அறிவுறுத்தி சென்றுள்ளனர்.

Next Story