கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் நடந்தது


கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் நடந்தது
x
தினத்தந்தி 28 Dec 2020 1:28 AM GMT (Updated: 28 Dec 2020 1:28 AM GMT)

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் நேற்று நடைபெற்றது.

திருச்சி,

ராணுவத்தில் சிப்பாய் பொதுப்பணி, தொழில்நுட்ப பிரிவு, டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நாகப்பட்டினத்தில் ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது.

இதில் திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக எழுத்துத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக எழுத்துத்தேர்வு மே, ஜூலை, ஆகஸ்டு, நவம்பர் என பல முறை அறிவிக்கப்பட்டும் ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்கப்பட்டது.

எழுத்து தேர்வு

இந்தநிலையில் நேற்று ராணுவ பணிக்கான எழுத்து தேர்வு திருச்சியில் ஜான்வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த தேர்வுக்கு 626 பேர் வந்து இருந்தனர்.

முன்னதாக தேர்வாளர்கள் தேர்வு மையத்துக்குள் நுழையும் முன்பு ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுடைய உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். தேர்வு மையம் முன்பு கண்டோன்மெண்ட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story