குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாக குளியல்


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 28 Dec 2020 3:49 AM GMT (Updated: 28 Dec 2020 3:49 AM GMT)

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இங்குள்ள அருவிகள் அனைத்திலும் தண்ணீர் கொட்டும். இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருவார்கள்.

இந்த ஆண்டு சீசன் ஜூன் மாதம் தொடங்கியது. ஆனால் மார்ச் மாதமே கொரோனா பரவல் காரணமாக குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு யாரும் வரவில்லை. இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி முதல் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

உற்சாக குளியல்

அதன்படி, காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிகிறார்கள். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து செல்கிறார்கள். மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் அதிகமாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது.

இதேபோன்று பழைய குற்றாலத்தில் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Next Story