தேசிய திறனாய்வு தேர்வு: 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 3,605 பேர் எழுதினர்


தேசிய திறனாய்வு தேர்வு: 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 3,605 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 28 Dec 2020 5:43 AM GMT (Updated: 28 Dec 2020 5:43 AM GMT)

10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 605 பேர் எழுதினார்கள்.

ஈரோடு,

மத்திய அரசின் நிதியின் கீழ் நாடு முழுவதும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வு எழுத தகுதி உடையவர்கள் ஆவர். தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த தேர்வு நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வு ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.முருகன் தலைமையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் மாதேசன் (ஈரோடு), சிவக்குமார் (கோபி), ராமன் (பெருந்துறை), பழனி (பவானி), குழந்தைவேல் (பொறுப்பு-சத்தியமங்கலம்) ஆகியோர் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

3,605 மாணவ-மாணவிகள்

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 130 மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வில் பங்கு பெற்று எழுதினார்கள். ஈரோடு கல்வி மாவட்ட அளவில் 10 பள்ளிக்கூடங்களில் 1,161 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். கோபி கல்வி மாவட்டத்தில் 6 பள்ளிக்கூடங்களில் 606 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். பவானி கல்வி மாவட்டத்தில் 8 பள்ளிக்கூடங்களில் 810 பேரும், பெருந்துறை கல்வி மாவட்டத்தில் 3 பள்ளிக்கூடங்களில் 332 பேரும் தேர்வு எழுதினார்கள்.

சத்தியமங்கலம் கல்வி மாவட்டத்தில் 7 பள்ளிக்கூடங்களில் 696 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். மொத்தம் மாவட்டத்தில் உள்ள 34 அரசு, நிதிஉதவி மற்றும் தனியார், மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் படித்து வரும் 3 ஆயிரத்து 605 மாணவ - மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வினை எழுதினார்கள்.

வேண்டுகோள்

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு தேசிய அளவில் மீண்டும் ஒரு தேர்வு நடக்கும். அதில் வெற்றி பெற்றால், சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 வகுப்பு முடிக்கும் வரை மாதம்தோறும் தலா ரூ.1,200 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

வரும் காலங்களில் தேசிய திறனாய்வு தேர்வில் இன்னும் கூடுதலாக மாணவ- மாணவிகள் பங்கேற்க வேண்டும். பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மாணவ-மாணவிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story