காதல் மனைவியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சுரண்டையில் கைதான தொழிலாளி வாக்குமூலம்


ஜோகிந்தர்
x
ஜோகிந்தர்
தினத்தந்தி 31 Dec 2020 1:50 AM GMT (Updated: 31 Dec 2020 6:27 AM GMT)

காதல் மனைவியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சுரண்டையில் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

சுரண்டை அருகே உச்சிபொத்தையைச் சேர்ந்தவர் வேல்சாமி மகள் பூங்கோதை (வயது 21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றியபோது, அங்கு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் (27) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

பின்னர் அவர்கள் சுரண்டை கோட்டை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இ்ங்கு ஜோகிந்தர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி இரவில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோகிந்தர், பூங்கோதையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவான ஜோகிந்தரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர்.

கணவர் கைது

இந்த நிலையில் சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி முன்னிலையில் ஜோகிந்தர் நேற்று சரண் அடைந்தார். பின்னர் அவர் சுரண்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து ஜோகிந்தரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜோகிந்தர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

ஒடிசாவுக்கு வர மறுத்ததால்...
என்னுடைய மனைவி பூங்கோதை அடிக்கடி அவரது பெற்றோரின் வீட்டுக்கு சென்று தங்கி விடுவார். இதனால் தனியாக வசித்த நான் சமைத்து சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்தேன். மேலும் மனைவி பூங்கோதையிடம் எனது சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு சென்று வசிப்போம் என்று கூறினேன். ஆனால் அவர் என்னுடன் ஒடிசா மாநிலத்துக்கு வர மறுத்து விட்டார்.

இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரத்தில் துணியால் மனைவியின் கழுத்தை இறுக்கி நெரித்து கொலை செய்தேன்.

இவ்வாறு ஜோகிந்தர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான ஜோகிந்தரை போலீசார் ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story