திருவட்டார் அருகே துணிகரம் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திருவட்டார் அருகே துணிகரம் ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Jan 2021 9:29 AM IST (Updated: 3 Jan 2021 9:29 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே பாரதபள்ளி, பிலாங்காலவிளையை சேர்ந்தவர் ராபர்ட் நிக்கல்சன் (வயது 61), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் அருகில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நெக்லஸ், பிரேஸ்லெட், தங்க மோதிரம் என மொத்தம் 7 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ஒரு ஏ.டி.எம். கார்டு ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் மாடியில் உள்ள பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

மிளகாய்பொடி தூவி...

பின்னர், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு சமையலறை வழியாக சென்றுள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வீட்டை சுற்றிலும் தூவி விட்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராபர்ட் நிக்கல்சன் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. மோப்ப நாய் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தகவல் அறிந்த தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

கண்காணிப்பு கேமரா

இந்த கொள்ளை குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டது உள்ளூர் ஆசாமிகளா? அல்லது பிரபல கொள்ளை கும்பலா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story