மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 4 Jan 2021 2:06 AM GMT (Updated: 4 Jan 2021 2:06 AM GMT)

மழையையும் பொருட்படுத்தாமல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று காலை 8 மணி முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. ஆனாலும் புது வருடம் பிறந்து முதல் ஞாயிற்றுகிழமையான நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ண மண்டபம், கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களில் மழை தூறலிலும் குடைப்பிடித்த நிலையில் சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். சிலர் மழையில் நனைந்தபடி புராதன சின்னங்களை சுற்றி பார்த்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மழையால் தொல்லியல் துறையின் ஆன்லைன் சர்வர் சரியாக இயங்காததால் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டு நுழைவு கட்டண மையங்களில் ஒருவருக்கு தலா ரூ.40 கட்டணம் பெற்று நுழைவு சீட்டு வழங்கப்பட்டது.

சுற்றுலா வாகனங்கள் அதிகம் திரண்டதால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் போதிய இடம் இல்லாமல் பல இடங்களில் சாலை ஓரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாமல்லபுரம் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Next Story