சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு


சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2021 3:14 AM GMT (Updated: 4 Jan 2021 3:14 AM GMT)

சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோவில்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.

கோவில்பட்டி,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக அ.தி.மு.க. சார்பில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்‘ என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக நேற்று முன்தினம் இரவில் எடப்பாடி பழனிசாமி கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

நேற்று காலையில் விருந்தினர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள சந்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு, தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டார்.

அ.தி.மு.க.வின் கோட்டை

கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டு இருந்த பிரசார மேடையில், கொட்டும் மழையில் குடைபிடித்தபடி நின்ற பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

வறட்சி, வறட்சி என்ற நிலைமை மாறி செழிப்பு, செழிப்பு என்று கூறும் அளவுக்கு மழை கொட்டுகிறது. கோவில்பட்டி தொகுதி எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டை. எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளரை எளிதில் வெற்றி பெறச் செய்வோம் என தயார் நிலையில் மக்கள் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி 2-வது பெரிய நகரமாகும்.

இங்கு கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறது. ஆக்கி விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் இருப்பதால் ரூ.7 கோடி செலவில் ஆக்கி மைதானம் உருவாக்கி கொடுத்து உள்ளோம். வீடுகளுக்கு குடிநீர் வழங்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கோவில்பட்டி நகருக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளோம்.

டெண்டர் விவகாரம்

இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. ஆட்சி தான். ஆனால் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு ஊழல் அரசு என்று சொல்லி வருகிறார். இதற்காக கவர்னரை சந்தித்து ஒரு பட்டியல் கொடுத்து உள்ளார். தி.மு.க. ஆட்சியில் டெண்டர் படிவம் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டுமே டெண்டரை வழங்கினார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் இ-டெண்டர் முறையில் யார் வேண்டுமானாலும் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை.

என் மீது சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்கிறார். உங்கள் மீது தான் 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது. தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்காக கோர்ட்டு சென்று வருகிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு ரூ.200 கோடி டெண்டர் விடப்பட்டது. ஆனால் ரூ.430 கோடி பில் கொடுத்து உள்ளனர். இது எல்லாம் ஊழல் இல்லையா? மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு மீது தவறான தோற்றத்தை உருவாக்கி வருகிறார். 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகிறார். மக்கள் ஓட்டு போட்டால் தான் வெற்றி கிடைக்கும். ஆனால் மக்கள் எங்களை வெற்றி பெறச் செய்ய தயாராக உள்ளனர்.

வாரிசு அரசியல்

தி.மு.க. குடும்ப கட்சியாக இருந்து கொண்டு வாரிசு அரசியல் நடத்துகிறார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தாத்தா, மகன், பேரன் என்று வரிசையாக வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம். அதற்கு நானே சாட்சி.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தி.மு.க. தான் கையெழுத்து போட்டது. அதுபோல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கும் கையெழுத்து போட்டது தி.மு.க. தான். ஆனால் அவர்கள் தான் தற்போது போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்கு தி.மு.க. துடிக்கிறது. விஞ்ஞான உலகில் மக்கள் இருப்பதை மறந்து மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். அதனால் மக்களை ஏமாற்ற முடியாது.

வெற்றி பெறச் செய்யுங்கள்

நேற்று முன்தினம் ஒரு பெண் மு.க.ஸ்டாலினிடம் குறைகளை கூறினார். ஒரு தலைவர் என்றால் அதனை பொறுமையாக கேட்டு, பதில் சொல்ல வேண்டும். ஆனால் அந்த பெண்ணை தி.மு.க.வினர் தாக்கினார்கள். ஆட்சிக்கு வராமலேயே இந்த அராஜகம் என்றால், ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும். தேர்தலில் நேர்வழியில் மக்களை சந்தித்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது தி.மு.க.வுக்கு கிடைக்கும்.

எனவே மக்கள் சிந்தித்து பார்த்து சட்டசபை தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “விளாத்திகுளம் பகுதியில் ஜெயலலிதா ஆட்சியில் 5 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. ரூ.9½ கோடி செலவில் கண்மாய் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து ஏரிகளும் தற்போது நிரம்பி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் ரே‌‌ஷன் கார்டு மூலம் ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. ஆனால் அ.தி.மு.க. அரசு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000-ம், தற்போது பொங்கல் பரிசாக ரூ.2,500-ம் கொடுக்கிறது. எனவே வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்“ என்றார்.

பின்னர் எட்டயபுரம் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாசலம்,

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் கே.சந்திரசேகர், தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் துறையூர் கே.கணேசன், மாவட்ட துணை தலைவர் டி.முகேஷ்குமார்,

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், துணை செயலாளர் விஜயராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோவில்பட்டி அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், கயத்தாறு வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, விளாத்திகுளம் நடராஜன், பால்ராஜ், நகர செயலாளர்கள் கோவில்பட்டி எஸ்.விஜயபாண்டியன், எட்டயபுரம் ஆழ்வார் உதயகுமார், கழுகுமலை முத்துராஜ், கயத்தாறு கப்பல் ராமசாமி, கடம்பூர் வாசமுத்து,

மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.செல்வகுமார், இணை செயலாளர்கள் கண்ணன், நீலகண்டன், குட்லக் செல்வராஜ், துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் வேலுமணி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் மாரியப்பன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூமாரியப்பன், எட்டயபுரம் நகர இளைஞர் பாசறை செயலாளர் அஜய்குமார்

கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் விற்பனையாளர் சங்க தலைவர் ஏ.கார்த்தீஸ்வரன், செயலாளர் கே.கண்ணன், பொருளாளர் கே.எஸ்.தினேஷ்ரோடி, தொழில் வாழ்த்த சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், தமிழ் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சீனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story