திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் முதல் செம்பட்டு வரை ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடிப்பு


திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் முதல் செம்பட்டு வரை ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2021 2:01 AM GMT (Updated: 5 Jan 2021 2:01 AM GMT)

திருச்சி- புதுக்கோட்டை சாலையில்் சுப்பிரமணியபுரம் முதல் செம்பட்டு வரை ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து செம்பட்டு வரை சாலையின் இருபுறமும் கடைகள், வீடுகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் என ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் உள்ளன.

சாலை விரிவாக்க பணிக்காக இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அதில் வசிப்பவர்கள் தாங்களாகவே அப்புறப்படுத்திக்கொண்டு காலி செய்து கொடுக்கும்படி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், அதில் வசித்தவர்கள் காலி செய்யவில்லை.

இடிக்கப்பட்டன

இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று காலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியை தொடங்கினார்கள். அதிகாரிகள் சர்வேயர்கள் மூலம் ஏற்கனவே நிலத்தை அளவீடு செய்து இருந்தார்கள். அளவீடு செய்த இடம் வரை நேற்று ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கடைகள், வீடுகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

சுப்பிரமணியபுரம் கடைவீதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக இடிக்கப்பட்டன. சில கடைகள் பாதிக்கு மேல் இடிக்கப்பட்டன. சில கடைகளின் முன்பகுதி மட்டும் இடித்து தள்ளப்பட்டன. தற்காலிக கடைகள், சாலையோர கடைகள், தகரம் மற்றும் கீற்று கொட்டகைகள் அப்படியே தூக்கப்பட்டன.

ேகாவில்-கிறிஸ்தவ ஆலயம்

பொன்மலைப்பட்டி சாலைக்கு திரும்பும் இடத்தில் உள்ள குடிசைகளும் அகற்றப்பட்டன. சாலைக்கு எதிர்புறம் இருந்த ஒரு கிறிஸ்தவ ஆலயம் முழுவதுமாக இடிக்கப்பட்டது. அதில் வைக்கப்பட்டு இருந்த மாதா மற்றும் ஏசு சொரூபங்களை இடிப்பதற்கு முன் அதன் நிர்வாகிகள் பாதுகாப்பாக எடுத்து சென்றனர். மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு கோவிலில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்தவை முற்றிலுமாக இடிக்கப்பட்டது.

மத்திய சிறைவாசலில் இருந்த சிறை அங்காடியும் அகற்றப்பட்டது. மொத்தத்தில் சுப்பிரமணியபுரத்தில் இருந்து செம்பட்டு வரை நேற்று ஒரே நாளில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட கடைகள் வீடுகள்மற்றும் கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மெக்கானிக் பட்டறை, பெட்டி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். மொத்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் வீடுகள் அப்புறப்படுத்தப்பட இருக்கிறது.

மத்திய சிறை அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மற்றும் ஜெயலலிதா நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்து கொடுக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்து வருபவர்களும் நேற்று தாங்களாகவே முன்வந்து பொருட்களை அப்புறப்படுத்தினார்கள். சிலர் வீடுகளை பூட்டிவிட்டு சென்றனர்.

சாலைமறியல்

செம்பட்டு புதுத்தெருவில் அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் ஆக்கி்ரமிப்பு கட்டிடங்களை இடித்தனர். அப்போது அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து திருச்சி-புதுக்கோட்டை மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். சுமார் 30 நிமிட நேரம் நீடித்த இந்த மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார், மாநகர துணை போலீஸ் கமிஷனர் பவன்குமார் ரெட்டி மற்றும்அதிகாரிகள் அங்கு விரைந்துவந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் தங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் தரவேண்டும் என கேட்டனர். ஆனால், அதிகாரிகள் அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஒரு நாள் மட்டும் அவகாசம் தரப்படும், அதுவரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

போக்குவரத்து மாற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நேற்று காலையில் இருந்து மாலை வரை பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

Next Story