கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டைகளை ஒப்படைக்க திரண்ட கிராமமக்களால் பரபரப்பு


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டைகளை ஒப்படைக்க திரண்ட கிராமமக்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Jan 2021 5:21 AM GMT (Updated: 5 Jan 2021 5:21 AM GMT)

பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராமமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுக்க வந்தனர்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை வட்டம் இருந்தை கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பஅட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொது இடங்கள் ஆக்கிரமிப்பு

இது குறித்து அவர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் வாய்க்கால், குளம், ஓடை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வழிபாட்டு தலம் அமைக்க முயற்சிமேற்கொண்டு வருகின்றனர். இந்துக்களை மதமாற்றம் செய்ய மூளை சலவை செய்து இந்துக்களுக்கு எதிராக மோதலை தூண்டி விடுகிறார்கள்., இந்துக்களை மதம் மாற வேண்டும் அல்லது ஊரை விட்டு வெளியேற வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். சொந்த ஊரில் வாழ்வதற்கு எங்களை அனுமதிக்காத காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் கிரண்குராலாவிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story