அ.தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை; பா.ஜனதா துணை தலைவர் அண்ணாமலை பேட்டி


பா.ஜனதா துணை தலைவர் அண்ணாமலை
x
பா.ஜனதா துணை தலைவர் அண்ணாமலை
தினத்தந்தி 7 Jan 2021 4:18 AM GMT (Updated: 7 Jan 2021 4:18 AM GMT)

அ.தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று பா.ஜனதா துணை தலைவர் அண்ணாமலை கூறினார்.

பா.ஜனதா கட்சி மாநில துணை தலைவர் அண்ணாமலை நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேட்பாளர் பட்டியல் விவகாரம்
பா.ஜனதாவை பொறுத்தவரை வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரமும், எந்த தொகுதி வேண்டும் என கேட்கும் அதிகாரமும் மாநில தலைமைக்கு கிடையாது. கட்சியின் மத்திய தலைமை தான் இது பற்றி முடிவு செய்யும்.

தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட போவதாக வெளியான 38 தொகுதிகள் அடங்கிய பட்டியல் பா.ஜனதா தயாரித்தது அல்ல. அந்த பட்டியலை பா.ஜனதா சார்பில் யாரும் வெளியிடவும் இல்லை. இதுபோன்று வெளியிடும் கலாசாரமும் பா.ஜனதாவுக்கு கிடையாது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த யாரோ வெளியிட்ட பட்டியல் அது. நிச்சயமாக அது பா.ஜனதாவின் வேலை கிடையாது.

குழப்பம் இல்லை
எந்தெந்த தொகுதியை கேட்பது என்பது குறித்து முடிவு செய்ய கட்சி தலைமை சார்பில் குழு அமைக்கப்படும். அந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை. குழு அமைத்த பிறகே பேசி முடிவு செய்யப்படும். அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் வேறு கட்சிகள் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தேர்தல் களம் சூடுபிடித்த பிறகே அது தெரியவரும். எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி வலுவாக உள்ளது.

ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒரு கொள்கை இருக்கும். அதற்காக கூட்டணியில் குழப்பம் என்று அர்த்தமல்ல. எங்களது பொது எதிரி தி.மு.க தான். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கட்சி தலைமை சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன். கட்சி தலைமை எந்த தொகுதியை சொன்னாலும் அங்கு போட்டியிட தயாராக இருக்கிறேன்.

தண்டிக்கப்பட வேண்டும்
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் கட்சி பேதமின்றி தண்டிக்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து. மு.க.ஸ்டாலின் குறித்து மு.க.அழகிரி கூறிய கருத்துக்களுக்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலினின் குடும்பத்தில் இருந்து ஒருவர் முன்வைக்கும் வாதங்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மு.க.அழகிரி என்ன முடிவு எடுக்கிறார் என்பதை ெபாறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். .

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசளிப்பு விழா
முன்னதாக தூத்துக்குடியில் உள்ள ஒரு அகாடமி சார்பில் கந்தசஷ்டி கவசத்தை முழுமையாக ஒப்புவிக்கும் 100 பேருக்கு தங்க நாணயம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கந்தசஷ்டி கவசம் ஒப்புவித்த 100 பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கும் விழா நேற்று நடந்தது. தொழில் அதிபர் மோகன் தலைமை தாங்கினார். அகாடமி தலைவர் பேச்சிமுத்து வரவேற்று பேசினார். பா.ஜனதா மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, தங்க நாணங்களை பரிசாக வழங்கினார்.

Next Story