பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் - வீடியோ, புகைப்பட ஆதாரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் - வீடியோ, புகைப்பட ஆதாரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை
x
தினத்தந்தி 8 Jan 2021 4:04 PM GMT (Updated: 8 Jan 2021 4:04 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். வீடியோ, புகைப்பட ஆதாரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்தி சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து இந்த பாலியல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் கைதான மற்றவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படை யில் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் அ.தி.மு.க. நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக் பாபு, ஹெரேன் பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரையும் சி.பி.ஐ. போலீசார் கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 20-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 3 பேரும் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஏற்கனவே நடந்த பாலியல் சம்பவம் குறித்து வெளியான வீடியோவில் சம்பந்தப்பட்ட 2 பெண்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயேதற்போது மேற்கண்ட 3 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானஅ.தி.மு.க. பிரமுகர் அருளானந்தம் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கோர்ட்டில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் சி.பி.ஐ. போலீசார் பொள்ளாச்சியில் முகாமிட்டு மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அருளானந்தம் உள்பட 3 பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரம் மற்றும் அவர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள் யார்? என்ற பட்டியலை சேகரித்து வருகின்றனர்.

கைதான ஹெரேன் பாலும், அருளானந்தமும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். ஹெரேன் பால் மூலம் திருநாவுக்கரசு கூட்டாளிகளுடன் அருளானந்தத்திற்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் கூட்டாக சேர்ந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி உள்ளனர். மேலும் வீடியோக்களை காட்டி முக்கிய பிரமுகர்களுக்கு அந்த பெண்களை விருந்தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை சி.பி.ஐ. போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது.

மேலும் அருளானந்தத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த வழக்கில் மேலும் சிலர் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு சி.பி.ஐ. போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில் வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யாரும் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கவும் சி.பி.ஐ. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளதால் அரசியல் கட்சியினர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.

Next Story